திண்டுக்கல்லில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் திறப்பு

 

திண்டுக்கல், ஏப்.27: திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், போக்சோ வழக்குகளின் பிரத்தியேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி சிவகடாட்சம் திறந்து வைத்தார்.திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012ன் கீழ் வழக்குகளின் பிரத்யேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி சிவகடாட்சம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தலைமை குற்றவியல் நீதிபதி மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நீதிபதி சிவகடாட்சம் பேசுகையில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் 2021ம் ஆண்டில் 228 போக்சோ வழக்குகள் பதிவாகி இருந்தன. போக்சோ வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் இதுவரை 67 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை மகளிர் விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த வழக்குகளின் எண்ணிக்கை 258 ஆக உள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்குகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு இன்று முதல் போக்சோ வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட உள்ளன’’ என தெரிவித்தார். விழாவில், முதன்மை சார்பு நீதிபதி மீனாசந்திரா, சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திண்டுக்கல்லில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: