ஓமலூர், மார்ச் 11: ஓமலூர் அருகே, ஒரே இடத்தில் இரண்டாவதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை முற்றுகையிட்ட பெண்கள், இடமாற்றம் செய்யக்கோரி நேற்று போராட்டம் நடத்தினர்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி கிராமத்தில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாநில நெடுஞ்சாலை ஓரமாக தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த பகுதிக்கு மதியம் 11 மணியில் இருந்து வரும் மது குடிப்பவர்கள், இரவு 10 மணி வரை கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த கடையில் தினமும் லட்சக்கணக்கில் மது பானங்கள் விற்பனையாவதாக கூறப் படுகிறது. இந்நிலையில், தற்போது அந்த மதுக்கடையை ஒட்டியே, மேலும் ஒரு மதுக்கடையை அதிகாரிகள் அதிரடியாக திறந்தனர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கூடியாதால், இந்த மதுக்கடையிலும் கூட்டம் அதிகரித்தது. ஏற்கனவே உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என மக்கள் போராடி வரும் நிலையில், மேலும் ஒரு மதுக்கடையை அதிகாரிகள் திறந்ததால், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நேற்று டாஸ்மாக் மதுக்கடை முன்பாக கூடிய பெண்கள், முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் மதுக்கடை இருப்பதால் குடிகாரர்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், போதையில் வீட்டிற்கு வந்து தொல்லை செய்வதாகவும், மதுக்கடை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களை கேலி கிண்டல் செய்வதாகவும், போதையில் ஆடைகளை களைந்து ஆபாசமாக நடந்து கொள்வதாகவும் பெண்கள் குற்றச்சாட்டினர். பெண்களின் முற்றுகை போராட்டத்தை அடுத்து, விற்பனையாளர்கள் மதுக்கடையை மூடிவிட்டு புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து பெண்கள் கூறியதாவது: அதிமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளே இங்கே மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். அவர்கள் ஊருக்குள் கடையை வைக்காமல், எங்களின் பகுதிக்கு கடையை கொண்டு வருகின்றனர். குடிகாரர்களின் தொல்லை அதிகமாக உள்ளது. போதையில் வாகனம் ஓட்டுவதால் தினமும் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், போதையில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என கூறியும், நீங்கள் ஏன் அங்கே செல்கிறீர்கள் என்று கூறி எங்களை மிரட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இங்குள்ள கடைகளை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும். இல்லாவிடில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.