கிருஷ்ணகிரி, மார்ச் 11: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தயாரித்த பாரம்பரிய உணவுத் திருவிழா, கண்காட்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்து, உணவுக் கண்காட்சியினை துவக்கி வைத்தார். இதில் உதவித் தலைமை ஆசிரியர் பெருமாள் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் சிறுதானிய உணவு வகைகளான கீரை வடை, கொள்ளு பாயாசம், கருப்பு கவுணி அரிசி கொலுக்கட்டை, கம்மங்கூழ், ராகி உருண்டை, புதினா சாதம், கொள்ளு சுண்டல், கம்பு ரொட்டி, கேழ்வரகு ரொட்டி, சாமை சாதம் போன்றவற்றை காட்சிக்கு வைத்திருந்தனர்.மேலும், சிறுதானிய உணவு வகைகளின் நன்மைகள் குறித்து மாணவிகள் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்தனர். அத்துடன் ஜங்புட் எனப்படும் துரித வகை உணவுகளின் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அனுசுயாபாய், செல்வகுமார், ரவி, அருண்குமார், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் பாரம்பரிய உணவுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ருசி பார்த்தனர்.