×

குடிபோதையில் தகராறு ராணுவவீரரை மது பாட்டிலால் தாக்கிய 4 வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி, மார்ச் 2: கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் ராணுவ வீரரை தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த கள்ளக்குறி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(41). ராணுவ வீரர். இவர்  கடந்த 2 நாட்களுக்கு முன் மாலை கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் நின்றிருந்த ஒருவருக்கும், சுதாகருக்கும், வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும், மது பாட்டிலால் சுதாகரை தலை, கை, கால்களில் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த சுதாகர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் எஸ்ஐ ஜெய்கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சுதாகரை தாக்கியவர்கள், கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான அப்பு(எ)ராம்குமார்(31), லால்(எ)விக்னேஷ்(23), சுரேஷ்(25),  ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த சந்திரபிரகாஷ்(25) என்பது தெரியவந்தது. மேலும்,  அன்றிரவு வேட்டியம்பட்டியை சேர்ந்த சென்றாயன்(35) என்பவருக்கும் அப்புவுக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பு, சென்றாயன் வீட்டிற்கு சென்று அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் எஸ்ஐ காணிக்கைசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இரு இடங்களில் நடந்த சம்பவங்களிலும் ஈடுபட்ட அப்பு உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...