×

காடையாம்பட்டி அருகே தனியார் நார் மில்லில் தீ விபத்து

காடையாம்பட்டி, பிப்.19: காடையாம்பட்டி அருகே தனியார் நார் மில்லில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ₹50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே குண்டுக்கல் ஊராட்சி ஜோடுகுளி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் தன்ராஜ்(50). இவர், தனது தோட்டத்தில் சொந்தமாக தென்னை நார் தயாரிக்கும் மில் வைத்துள்ளார். இந்த மில்லில் நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள், தென்னை மட்டையிலிருந்து நார்களை பிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மாலை 5 மணியளவில், நார்மில்லின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென பரவி தேங்காய் நார்கள் முழுவதும் எரியத்தொடங்கியது.   இதுகுறித்த தகவலின்பேரில், காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால், முடியாததால் ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டனர். பின்னர், அனைவரும் சேர்ந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த சம்பவத்தில் ₹50 லட்சம் மதிப்பிலான  தென்னை நார் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fiber mill ,Kadaiyampatti ,
× RELATED கரும்பு விற்பனை அமோகம்