காடையாம்பட்டி, ஜன.29: காடையாம்பட்டி அருகே பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா, விளையாட்டு துறை அலுவலக திறப்புவிழா மற்றும் விளையாட்டில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமார் கலந்து கொண்டு விளையாட்டு துறை அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில், ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் ரவி, மாவட்ட கவுன்சிலர் வசந்தி கே.சி.முருகன், ஊராட்சி மன்ற தலைவர் நர்மதாதேவி, ஒன்றிய கவுன்சிலர் புஷ்பா ஆகியோர் கலந்துகொண்டு, பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரனையும் பாராட்டினர். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நாடகங்கள் நடந்தது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.