கரூர், ஜன. 9: கரூர் வெங்ககல்பட்டி அருகே சர்வீஸ் சாலை பிரியும் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் திருச்சி பைபாஸ் சாலையின் இடையே திண்டுக்கல், வெள்ளியணை போன்ற பகுதிகளுக்கான சாலை உள்ளது. இதனால், வெங்ககல்பட்டி அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்நிலையில், கரூரில் இருந்து திருச்சி, உப்பிடமங்கலம் போன்ற பல பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையின் வழியாக பிரதான சாலையை அடைந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், சர்வீஸ் சாலை பிரியும் பகுதியில் போதிய அறிவிப்பு வாசகங்கள் இல்லாத காரணத்தினால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும், இரவு நேரங்களில் மேலும் பல்வேறு சிரமங்களை வாகன ஓட்டிகள் அனுபவித்து வருகின்றனர். எனவே, சர்வீஸ் சாலை பிரியும் பகுதிகளில் எந்த பகுதிக்கு செல்வதற்கான சர்வீஸ் சாலை என்ற அறிவிப்பு பலகை வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.