×

ஓமலூர் அருகே பரபரப்பு கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி

ஓமலூர், ஜன.8: ஓமலூர் அருகே குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்த கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் கடைவீதி எல்லையம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் அய்யனார்(40). கூலி தொழிலாளியான இவருக்கு ஜோதி(35) என்ற மனைவியும், ஹரி(12), கோகுல்ராஜ்(5) என்ற 2 மகன்களும் உள்ளனர். ஜோதி  டைலராக உள்ளார். அய்யனாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 29ம் தேதி ஜோதி வீட்டில் இருந்தபோது மதுபோதையில் வந்த அய்யனார் தகராறு செய்துள்ளார். அப்போது,  மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். சிறிதுநேரம் கழித்து அப்பளம் சுட்டு கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, அடுப்பு பற்ற வைத்து அப்பளம் பொறித்துக்கொண்டிருந்த ஜோதி, கொதிக்கும் எண்ணையை எடுத்து வந்து  அய்யனார் மீது ஊற்றியுள்ளார்.

இதில், கை மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயமடைந்த அய்யனார் கதறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அய்யனாரின் சகோதரி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில், ஓமலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து ஜோதியை கைது செய்தனர். தொடர்ந்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். கொதிக்கும் எண்ணையை கணவன் மீது ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Omalur ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!