திருவண்ணாமலை, டிச.19: திருவண்ணாமலையில் நடந்த மின்வாரிய கேங்க்மேன் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் 475 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள கேங்க்மேன்(பயிற்சி) பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் கடந்த 17ம் தேதி வரை கேங்க்மேன் பணிக்கான உடற்தகுதித் தேர்வு நடந்தது.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 2,902 நபர்களுக்கு, உடற்தகுதித் தேர்வில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பியிருந்தனர். இதில் 1,870 நபர்கள் மட்டும் தேர்வில் கலந்துகொண்டனர். மின் கம்பத்தில் ஏறுதல், கம்பத்தின் உச்சியில் மின் உபகரணத்தை பொருத்துதல் உள்ளிட்ட 3 நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 475 நபர்கள் மூன்று நிலைகளிலும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜன் தெரிவித்தார்.