×

குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை ₹5000 அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்

திருவண்ணாமலை ஏப். 23: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்த கடைக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று நடைபெறுகிறது. அதை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். எனவே, சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகளை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேற்று இரவு மீண்டும் ஆய்வு செய்தார். அதன்படி, கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களை கலெக்டர் எச்சரித்தார்.

கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக நடைபாதையில் கடைகளில் முன்பு வைத்திருந்த சேர்களை அகற்ற உத்தரவிட்டார். மேலும், கிரிவல பாதையில் உள்ள டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் டீத்தூள் தரமானதா, உணவுப் பொருட்கள் தரமானதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. டீ கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் எச்சரித்தார். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார். அதை தொடர்ந்து, கிரிவல பாதையில் உள்ள ஒரு கடையில் குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அந்த குடிநீர் பாட்டில் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட கடைக்கு ₹5000 அபராதம் விதித்து, அதனை வசூலிக்குமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை ₹5000 அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Kriwala road ,Thiruvannamalai ,Chitra Pournami Krivalam ,Tiruvannamalai ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலையும்...