×

ஜலகண்டாபுரத்தில் கார் நிறுத்தும் இடமாக மாறிய அரசு மருத்துவமனை வளாகம் நோயாளிகள் அவதி

ஜலகண்டாபுரம், டிச.3:  ஜலகண்டாபுரத்தில், நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஜலகண்டாபுரம், ஆவடத்தூர், சூரப்பள்ளி, தோரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் மருத்துவமனை வளாகம், பெரும்பாலான நேரங்களில் நெரிசல் மிகுந்து காணப்படுவது வழக்கம்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் நடக்கும் விஷேசங்களுக்கு வருவோர், அங்கு வாகனங்களை நிறுத்தாமல் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் உடல் நலம் குன்றி சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள், மருத்துவமனையின் உள்ளே செல்ல முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள திருமண மண்டபங்களில் நடக்கும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு வருவோர், தங்களது வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அவசர காலங்களில் மருத்துவமனையின் உள்ளே ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மருத்துவமனை வளாகத்தை வெளிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.


Tags : Jalakandapuram ,car parking spot ,
× RELATED வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சுத்திணறி பலி