கலசபாக்கம், நவ.13: கலசபாக்கம் தொகுதியில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்காக பாடுபடும் நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர், போளூர் ஒன்றியங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் கலசபாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன், அவைத்தலைவர் கருணாமூர்த்தி முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி வரவேற்றார்.
இதில் எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகையில், `உள்ளாட்சி தேர்தலில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம். ஜமுனாமரத்தூர், போளூர் ஒன்றியங்களில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். வெற்றிக்காக பாடுபட்டு சாதனை படைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்படும். எனவே, மாவட்டத்திலேயே கலசபாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற இன்று முதலே நிர்வாகிகள் தேர்தல் பணிகளை துவங்க வேண்டும்’’ என்றார். இதில் முன்னாள் ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் மனோகரன். எல்.என்.வெங்கடேசன், நகர செயலாளர் சித்திரைசேனன் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.