கெங்கவல்லி, நவ.5: கெங்கவல்லி தாலுகா 95 பேளூர் கிராமத்தில், மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, ஒருமித்த பூச்சிக்கொல்லி தெளிப்பு திட்டம் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண் இணை இயக்குனர் கமலம் தலைமை வகித்தார். துணை இயக்குனர் (பயிர்பாதுகாப்பு) முரளிதரன் முன்னிலை வகித்தார். ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, துணை இயக்குனர் செல்லதுரை, பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். கெங்கவல்லி வேளாண் உதவி இயக்குனர் சித்ரா கூறுகையில், ‘கெங்கவல்லி வட்டாரத்தில் வரும் 7 தினங்களுக்குள், மக்காச்சோள பயிருக்கு பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கப்படும். எனவே, விவசாயிகள் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொண்டு, படைப்புழுவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர்.