கிருஷ்ணகிரி, அக்.16: வறட்சியால் காய்ந்து போன தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பர்கூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர்கள் சுந்தரவள்ளி, பழனி, பூதட்டியப்பா ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தின் போது கட்சியின் பர்கூர் வட்ட செயலாளராக கண்ணு தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில், பர்கூர் பகுதியில் தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை தகுதியுள்ளவர்களுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கும், குடியிருப்பவர்களுக்கு நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பர்கூர் தாலுகாவில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு காய்ந்து போன தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். புதிய மரக்கன்றுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், நிர்வாகிகள் தேவராஜ், சீனிவாசன், முனிசாமி, மாரியப்பன், வெங்கடேசன், ராஜேந்திரன், சிவக்குமார், சகாதேவன், அப்துல்பஷீர், குணசேகரன், கோவிந்தராஜி, மாதேஸ்வரி, ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.