கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். அசோக்குமார் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். பரமசிவம் முன்னிலை வகித்தார். தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் வேலு, உதவி மாவட்ட அலுவலர் அண்ணாதுரை மற்றும் நிலைய அலுவலர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்று, தீத்தடுப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
அப்போது, ஆபத்து காலங்களில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை விளக்கி கூறினர். விபத்து காலங்களில் உயர் மாடியில் சிக்கியவர்களை விரைவாக மீட்பது குறித்தும், தீயணைப்பான்களை கொண்டு ஆரம்ப நிலையில் ஏற்படும் தீ விபத்துக்களை விரைந்து தடுப்பது குறித்தும், விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், புயலின் போது சாலையில் விழும் மரங்களை இயந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றுவது, இரும்புகளை துண்டாக்குவது போன்றவை குறித்தும் விளக்கி கூறுப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.