×

கெங்கவல்லி அருகே குடும்பத்தகராறில் எலி பேஸ்ட் சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

கெங்கவல்லி, மே 28:  கெங்கவல்லி அருகே குடும்பத்தகராறில் எலி பேஸ்ட் சாப்பிட்டதில் வாலிபர் உயிரிழந்தார். கர்ப்பிணி மனைவிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறத. கெங்கவல்லி தாலுகா வீரகனூர் அருகே தென்கரை பகுதியைச் சேர்ந்த மருதை மகன் ஆனந்தராஜ்(25). பட்டதாரியான இவருக்கும், உறவினரான மகாலட்சுமி(21) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, ஆனந்தராஜ் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில், குடும்பத்தகராறு காரணமாக கடந்த 20ம் தேதி கணவன்- மனைவி இருவரும் எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளனர். இதில், மயங்கி விழுந்த தம்பதியை குடும்பத்தினர் மீட்டுச்சென்று, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி ஆனந்தராஜ் உயிரிழந்து விட்டார். மகாலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர், தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து வீரகனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : suicide ,family house ,Kangavalli ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை