கரூர், மே 9: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹரி பிரதாப் சாஹி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் 24 மணி நேரமும் இயங்க கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை, பறக்கும் படை மற்றும் நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினரின் வாகனங்களை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கும் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண்களில் இதுவரை பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை, அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பன தகவல்களையும், அந்த தகவல்கள் குறித்த பதிவேடுகளையும் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு செய்தார்.தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் செயல்படும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிற்கான அறையினை பார்வையிட்டு, தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளூர் கேபிள் சேனல்கள் மற்றும் இதர சேனல்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் வெளியிடப்படுகிறதா? எனவும் கண்காணிக்கப்பட்டது.
இந்த குழுவின் மூலம் கரூர் மாவட்டத்தில் ஒளிபரப்பாகும் 24மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை முறை ஒளிபரப்படுகிறது என்பதும் கணக்கெடுக்கப்பட்டு கணக்கீட்டு குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் விளம்பரத்திற்கான செலவு சேர்க்கப்படும் என்பது குறித்தும் பொதுப்பார்வையாளரிடம் எடுத்துரைக்கப்பட்டது.