வேலூர், மே 3: ஆம்பூர், வாணியம்பாடி இடி, மின்னல் பலத்த காற்றுயால் சேதமடைந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. மழை பெய்யுமா? என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி மாலை ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன், பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்யது.இதில், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் சூறாவளி காற்றில், ஜானகி அம்மாள் என்பவருக்கு சொந்தமான 8 ஆடுகள் சுவர் இடிந்து விழுந்து பலியாயின. அப்பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.அதேபோல், ஆம்பூரில் சோமலாபுரம், பெரிய கொம்மேஸ்வரம், தோட்டாளம், குளிதிகை, ஜமீன் உட்பட பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை தோட்டமும், பெரியாங்குப்பத்தில் 5 ஏக்கரில் பயிரிடப்படடிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, தோட்டக்கலை துறையினர், வருவாய் துறையினருடன் இணைந்து பலத்த காற்றால் சேதமடைந்த வாழை மரங்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளனர்.இப்பணி முடிந்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்கப்படும், அதன் பின்னர் கலெக்டர் அந்த அறிக்கையை தமிழக அரசு அனுப்பி வைப்பார். தொடர்ந்து அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். அப்போது தான் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.