போச்சம்பள்ளி, மே 1: போச்சம்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்று வீசியது. போச்சம்பள்ளி அருகே கொடமாண்டப்பட்டி பகுதியில் சூறைக்காற்று வீசியதில் அமீர் என்பவர் வீட்டின் முன் இருந்த மின்கம்பம் உடைந்து வீட்டின் மீது விழுந்தது. இதனால் கிராமத்தில் உள்ள ராசு வீதி, மசூதி வீதி பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியது. அமீர் வீட்டிற்கு செல்லும் நடுபாதையின் நடுவில் மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி வலுவிழந்து ஆபத்தான நிலையில் இருந்தது . இந்த கம்பத்தை மாற்றும்படி, மின்வாரிய அதிகாரிகளிடம் கடந்த ஓராண்டாக அமீர் கூறி வந்தார். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று சூறைக்காற்று வீசிய போது மின்கம்பம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், சூறைகாற்றுடன் கனமழை பெய்த போது, போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் உள்ள தோப்புகளில் இருந்த மாமரங்களில், சுமார் 5 டன் மாங்காய் மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. இதனால் மா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.