×

பெரும்புதூரில் தளம் பிரிப்பு மேம்பாலம் அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்குறுதி

சென்னை, ஏப். 14: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று காலை குன்றத்தூர் ஒன்றியம், கரசங்கால் ஊராட்சியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், ஊராட்சி செயலாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது டி.ஆர்.பாலு பேசியதாவது: பெரும்புதூரில் இருந்து ஒரகடம், குன்றத்தூர், காஞ்சிபுரத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இவ்வாறு செல்பவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைகின்றனர்.

குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, பொதுமக்கள் இதுபோன்ற போக்குவரத்து பிரச்னைகளில் சிக்கி தவிப்பதை தடுக்கும் விதமாக பெரும்புதூரில் இருந்து ஒரகடம், குன்றத்தூர், காஞ்சிபுரம் செல்லும் சாலைகளின் சந்திப்பில் தளம் பிரிப்பு (கிரேடு செப்ரேட்டர்) மேம்பாலம் அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல்கள் குறைந்து, பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான இடங்களுக்கு உரிய நேரத்தில் எளிதாக சென்று வர முடியும். எனவே இந்த திட்டத்தை கொண்டு வந்து பொதுமக்களுக்கு நல்ல வழியில் சேவை செய்ய பொதுமக்கள் அனைவரும் வரும் 18ம் தேதி திமுக கூட்டணி கட்சிக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : promotion ,DMK ,TR Baalu ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்