கிருஷ்ணகிரி, ஏப்.3: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தங்கபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தேவராஜ்(35). இவர், நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(22), கந்தசாமி(25) ஆகியோருடன் டூவீலரில் குருபரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். மேலுமலை அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம், தேவராஜ் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த தேவராஜ், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஹரிகிருஷ்ணன் மற்றும் கந்தசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்த தேவராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.