சேலம், மார்ச் 7: சேலம் அரசு அருங்காட்சியகத்தில், நடுகற்கள் கருத்தரங்கம் நிறைவு விழா மற்றும் கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்கால தாழிகள், டெரகோட்டா உருவங்கள், அரசர்கள் பயன்படுத்திய வாள்கள், நாட்டு துப்பாக்கிகள், பதப்படுத்தப்பட்ட பாம்புகள், ஆமை ஓடு, நாமக்கல் கவிஞரின் உடமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் எண்ணற்ற கற்சிலைகள், நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர் ஒருவருக்கு ₹5 வசூல் செய்யப்படுகிறது.
இந்த அருங்காட்சியகம் சார்பில் நடுகற்கள் கருத்தரங்கம் நிறைவு விழா மற்றும் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெனார்தனம் தலைமை வகித்து புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் தொல்லியல் அறிஞர் குழந்தைவேலன் நடுகற்கள் குறித்து பேசினார். சேலம் அரசு மகளிர் கல்லூரியின் வரலாற்று துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.