போச்சம்பள்ளி, மார்ச் 7: போச்சம்பள்ளி அருகே ஆஞ்சநேயர் கோயில் உண்டியலை உடைத்த மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்றனர். போச்சம்பள்ளி அடுத்துள்ள பனங்காட்டூரில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன், இந்த கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கோயிலை பூட்டி விட்டு பூசாரி சென்றார். அமாவாசையையொட்டி நேற்று காலை கோயிலுக்கு பக்தர்கள் பூஜை செய்ய வந்தனர். அப்போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் கமலேசன் விசாரணை நடத்தி வருகிறார். சமீபத்தில் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்துள்ளதால், உடைக்கப்பட்ட உண்டியலில் சுமார் ₹20 ஆயிரம் வரை காணிக்கை பணம் இருந்திருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.