கொள்ளிடம், டிச.4: கொள்ளிடம அருகே புத்தூர் நெடுஞ்சாலையில் தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் விலங்கினங்களின் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் கடைத் தெருவையொட்டி புத்தூரிலிருந்து திருமயிலாடி செல்லும் நெடுஞ்சாலையில், புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகளும் இறந்த விலங்கினங்கள் மற்றும் அழுகிய காய், கறிகள் உள்ளிட்ட குப்பைகள் தினந்தோறும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. வெயில் நேரத்தில், காய்ந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் பறந்து சென்று அருகே உள்ள வியாபாரக் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு சென்று தேங்குவதால், குடியிருப்புகளைச் சுற்றி குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. இறந்த நாய் போன்ற விலங்கினங்களை குப்பையுடன் சேர்ந்து கொட்டும் போது துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி கொண்டிருப்பதால் மேலும் பல வகையான நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஊராட்சி சார்பில் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் உரிய தகரக்கொட்டகை வசதி செய்து தரப்பட்டு ஊராட்சியில் இதற்கான பணியாளார்கள் நியமிக்கப்பட்டும் குப்பைகளை நெடுஞ்சாலையில் மக்கள் வசிக்கும் இடத்திலேயே அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள், வியபாரிகள் நலன் கருதி உடனே குப்பைகளை அகற்றவும் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் குப்பைகளை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புத்தூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
