கரூர், நவ.21: கரூர் அருகே அனுமதியின்றி சந்து கடை விற்பனைக்காக டாஸ்மாக் சரக்குகளை ஏற்றி வந்த 3 பேர் மீது மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் திருமாநிலையூர் அமராவதி பாலம் அருகே மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டெம்போ வேனை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது, வேனில், 1,632 குவார்ட்டர் பாட்டில்கள், 36 பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அனைத்து சரக்குகளும், ஒரு டாஸ்மாக் கடையில் விலை கொடுத்து வாங்கிக்கொண்டு வரப்பட்டு, சந்து கடையில் வைத்து அனுமதியின்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, வேனில் இருந்த தங்கராஜ், அருண்குமார் ஆகிய இருவர் மற்றும் தகவல் கேட்டு தப்பியோடிய ரமேஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிப்பதோடு, பிடிபட்ட சரக்குகளையும் மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.