×

தம்மம்பட்டி பகுதியில் காலிபிளவரில் மகசூல் பாதிப்பு விவசாயிகள் கண்ணீர்

தம்மம்பட்டி, நவ.21: தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவின் காரணமாக  காலிபிளவரில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய காலிபிளவர் உள்ளிட்ட பயிர்களை சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்து விவசாயிகள் சாதனை படைத்து வருகின்றனர், காலிபிளவர் நல்ல லாபம் தரும் பயிராக உள்ளதால், கார்த்திகை மாதத்துக்கு முன்பு சாகுபடி செய்து தை மாதத்துக்குள் அறுவடை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். முறையாக பராமரிக்கும்பட்சத்தில் 80 நாட்களில் மகசூல் கிடைத்துவிடும். அப்போது, தேவை அதிகரிக்கும் சமயங்களில் ஒரு பூவின் விலை 40க்கு கூட விற்பனையாகும்.

காலிபிளவர் சாகுபடி செய்யும் கால நிலைகளையும், மண்ணின் தன்மையையும், அறுவடை செய்யும்போது காலிபிளவர் பூக்களின் மார்க்கெட் நிலவரத்தையும் விவசாயிகள் தெரிந்து கொண்டு பயிர் செய்தால் அதிக லாபம் பெறமுடியும். இந்நிலையில், தம்மம்பட்டி மற்றும் கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவின் காரணமாக அறுவடைக்கு தயாரான காலிபிளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து செடிகளிலும் நூல் புழு, பூஞ்சான நோய் தாக்குதலால் ஏக்கருக்கு 12 ஆயிரம் செடிகளில், 6 ஆயிரம் செடிகள் உரிய வளர்ச்சியை எட்டாத நிலையில் ₹50 ஆயிரம் வரையிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு காலத்தில் தம்மம்பட்டி பகுதியில் புகையிலை சாகுபடி பிரதானமாக இருந்து வந்தது. கால போக்கில் மாற்று பயிருக்கு மாறிய நிலையில், கடந்த காலங்களில் காலிபிளவரில் கூடுதல் வருவாய் கிடைத்ததால் ஏராளமானோர் அந்த பயிருக்கு மாறினர். இந்நிலையில், தற்போது கடும் பனிப்பொழிவின் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. சரியானபடி வெயில் படாத நிலையில் செடிகளில் பிடித்த பூக்கள் அனைத்து சரியாக விரியாமல் மூடிய நிலையிலேயே உள்ளது. இதனால், பூக்களில் தங்கிய ஈரத்தன்மையால் பூச்சி தாக்குதலும் அதிகரித்துள்ளதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. பூக்களின் தரம் குறைந்துள்ளதால் உரிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலிபிளவர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : area ,Dhamamampatti ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது