திருவண்ணாமலை, நவ.14: திருவண்ணாமலை தீபத்திருவிழா சுவாமி திருவீதியுலாவுக்கு பயன்படுத்துவதற்காக, 10 புதிய திருக்குடைகளை ஆன்மிக சேவா சங்கத்தினர் காணிக்கையாக வழங்கினர். அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவம், இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறும்.
திருவீதியுலாவில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு மிக்க வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அதையொட்டி, திருவீதியுலாவுக்கான புதிய திருக்குடைகளை, ஆண்டுதோறும் சென்னை பல்லாவரத்தைச் ஒரு ஆன்மிக சேவை அமைப்பினர் காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
அதன்படி, தொடர்ந்து 14வது ஆண்டாக 11 திருக்குடைகள் மற்றும் 4 அலங்கார பாதாகைகளை அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று காலை ஊர்வலமாக கொண்டுவந்து காணிக்கையாக வழங்கினர். இவற்றின் மதிப்பு 2.50 லட்சமாகும். சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள கைவினை கலைஞர்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த திருக்குடைகளை வடிவமைத்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி சுவாமி வீதிஉலாவின்போது பயன்படுத்தப்படும் திருக்குடைகள் அர்ப்பணிப்பு ஊர்வலம் இசை முழங்க நடந்தது.