×

வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த பிரபல ரவுடி கைது: 3 சிறுவர்களும் சிக்கினர்

சென்னை: வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து பராமரித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பில் உள்ள ஒரு அடுக்குமாடியின் மேல் தளத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று காலை அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, குடியிருப்பின் பி பிளாக் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்க்கப்படுவது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர். அதில், கட்டிடத்தை சேர்ந்த பிரபல ரவுடிகள் மாணிக்கம் (22), யுவராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் மட்டும் மொட்டை மாடிக்கு அடிக்கடி செல்வது தெரிந்தது. அதில் கடந்த 10 நாட்களுக்கு முன் யுவராஜ், ஒரு வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அதே பகுதியில் பதுங்கி இருந்த மாணிக்கத்தை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், போதைக்காக கஞ்சா வாங்கும்போது, அதில் உள்ள விதையை எடுத்து தொட்டியில் போட்டு வைத்துள்ளனர். அது வளர்ந்து செடியாக ஆனதும், அதை காய வைத்து பயன்படுத்தியது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாணிக்கத்தை சிறையிலும், 3 சிறுவர்களை சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர். சிறையில் உள்ள யுவராஜ் மற்றும் மாணிக்கம் மீது பல காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rowdy ,terrace ,plant ,children ,Kanja ,house ,
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...