விழுப்புரம், அக். 23: விழுப்புரம் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை ஏபிஎஸ் நகர், தெய்வம் நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதனிடையே குடியிருப்புக்கு நடுவே தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று அங்கு டவர் அமைக்க முடிவு செய்துள்ளது. அதற்காக தனிநபர் ஒருவரின் இடத்தை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்து நேற்று டவர் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது. இதனிடையே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து டவர் வைக்க பள்ளங்கள் தோண்டும் பணி நடந்த நிலையில்
ஆவேசமடைந்த பொதுமக்கள் டவர் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு பகுதி மத்தியில் செல்போன் டவர் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சு மூலம் பொதுமக்களுக்கு புற்று நோய், கர்ப்பிணி பெண்களுக்கு சிசு பாதிப்பு, ஆண்மை குறைவு போன்ற நோய் ஏற்படுவதோடு விலங்கு மற்றும் பறவைகள் அழிந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். எனவே இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து அந்நிறுவன அதிகாரிகள் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு சென்றனர். மீண்டும் பணிகளை தொடங்கினால் ஆட்சியரிடம் முறையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.