சென்னை: சாதியப் பாகுபாட்டிலிருந்து காக்க சியாட்டில் பேரவை உறுப்பினர் சாமா சாவந்த் அவசரச் சட்டத்தை முன்மொழிந்ததற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவின் சியாட்டில் பெருநகரப் பகுதியில் வசிக்கும் 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெற்காசிய மக்களைச் சாதியப் பாகுபாட்டில் இருந்து காக்க சியாட்டில் பேரவை உறுப்பினர் சாமா சாவந்த், அவசரச் சட்டத்தை முன்மொழிந்துள்ளதற்கு எனது பாராட்டுகள். எந்த வடிவில் பாகுபாடு இழைக்கப்படுமாயினும் அதனை ஒழிக்க முன்னெடுக்கப்படும் எந்த ஒரு முற்போக்கு நடவடிக்கையும் போற்றத்தக்கது’ என கூறியுள்ளார்.