சென்னை: பிரபல சினிமா ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்னம் உடல்நல குறைவு மற்றும் முதுமை காரணமாக நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். நேற்று சென்னை வடபழனி ஸ்டண்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்னத்தின் உடலுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த், ஜூடோ ரத்னம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் கூறியது:1976-ம் ஆண்டில் இருந்து அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு என்று தனியாக ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டு அதை திரையுலகிலும் அறிமுகப்படுத்தினார். அவருடைய உதவியாளர்கள் இன்று பெரிய ஸ்டன்ட் மாஸ்டர் ஆக உள்ளார்கள். முரட்டு காளை படத்தில் ரயிலில் நடைபெறும் சண்டைக்காட்சி போல இதுவரை யாரும் செய்தது இல்லை. 93 வயதில் பூரண வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.