சென்னை: தென்னிந்திய திருச்சபை தேர்தல் நடத்தலாம், மறு உத்தரவு வரும்வரை முடிவை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபையின் ஆயர் மன்றத்தின் (சினாட் கவுன்சிலின்) உறுப்பினர்களாக இருக்கும் கேரளாவை சேர்ந்த சுனில்தாஸ், ஜெயராஜ் உள்ளிட்ட சிலர் திருச்சபை தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவில், மாட்ரேட்டராக வயது வரம்பை 70ஆக உயர்த்தி நடைபெறும் தேர்தலுக்கும், துணை மாட்ரேட்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டும்.
திருச்சபையை நிர்வகிக்கவும், அதில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.தங்கசிவன் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாட்ரேட்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு சி.எஸ்.ஐ. விதிகளின்படி ஓட்டு சீட்டு முறைப்படி தேர்தலை நடத்தலாம்.
ஆனால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது. தற்போதுள்ள நிர்வாகிகளே மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதவியில் தொடரலாம். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.