மேட்டூர்: தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு சின்னகாளியம்மன் கோயில் அருகே வனப்பகுதி காவிரி ஆற்றில் 2 சிறுமிகள், கணவன், மனைவி ஆகியோரது சடலங்கள் நேற்று மாலை மிதந்தது. தகவலறிந்து வந்த கொளத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், சடலங்களாக மீட்கப்பட்டவர்கள், சேலம் தாதகாபட்டியை சேர்ந்த யுவராஜ் (41), இவரது மனைவி வான்விழி (32) மற்றும் அவர்களது மகள்கள் நித்திஷா (7), அக்ஷரா (3) என தெரியவந்தது. சிறுமி நித்திஷாவிற்கு நீரிழிவு நோய் ஏற்பட்டு தொடர் சிகிச்சை அளித்துள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு முன் அக்ஷராவிற்கும் நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தது. இதனால் விரக்தியடைந்த தம்பதி, ‘சிறு வயதில் குழந்தைகள் இருவருக்கும் நீரிழிவு நோய் வந்துள்ளது, இவர்களை எப்படி காப்பற்றப்போகிறோம் என தெரியவில்லையே’ என, கடிதம் எழுதிவிட்டு நேற்று முன்தினம் குடும்பத்தோடு காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.