×

திமுக பெண் நிர்வாகியின் வீடியோ பதிவை வெளியிட்டு தமிழகத்துக்கு மோடி இனியாவது நல்லது செய்வாரா என செல்லூர் ராஜூ கேள்வி: எக்ஸ் தள பதிவால் அதிமுகவினரிடையே பரபரப்பு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளத்தில், ‘‘புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிஜி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா…. பார்ப்போம்!!!’’ என தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு மாநகர திமுக மகளிரணி அமைப்பாளர் அனிச்சம் கனிமொழி, ‘‘மோடி அரசு தமிழ்நாட்டிற்கு செய்த துரோகம் என்ன தெரியுங்களா?’’ என்ற தலைப்பில் பேசிய வீடியோ பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவில் அனிச்சம் கனிமொழி, ‘‘ஆதாரமில்லாமல் மோடி அரசை எப்போதும் குறை சொல்வதையே பொழப்பா வச்சிருக்கீங்கள்னு சொல்றவங்களுக்கு நான் விபரம் சொல்றேன். மோடி ஆட்சி வந்தப் பிறகு தமிழ்நாட்டில் வருமானவரி ஆய்வாளர்கள்னு 1,300 பேர் போட்டிருக்காங்க. அதுல ஒருத்தர் கூட தமிழர் இல்லை. ஹை அபீசியல்ல வருமானவரி கண்காணிப்பாளர்கள்னு 172 பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க. ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. எஸ்பிஐல 1,500 பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க.

ஒருவரும் தமிழர் இல்லை. தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் மட்டும் 1,765 பேருக்கு வேலை கிடைச்சிருக்கு. ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. திருச்சி பொன்மலை ரயில்வேயில் 3,800 பேருக்கு வேலை போட்டதில், 80 சதவீதம் பேர் வடக்கிலிருந்து வந்தவர்கள். எல்லோருக்கும் மேலாக குரூப்-டி தேர்வுல நம் தமிழர்களின் இரண்டரை லட்சம் அப்ளிகேசன்களை மோடி அரசாங்கம் ரிஜக்ட் செஞ்சிருக்காங்க’’ என தெரிவித்துள்ளார். திமுக பெண் நிர்வாகியின் பேச்சை போட்டு, ‘மோடி இனிமேலாவது தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வாரா’ என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திமுக பெண் நிர்வாகியின் வீடியோ பதிவை வெளியிட்டு தமிழகத்துக்கு மோடி இனியாவது நல்லது செய்வாரா என செல்லூர் ராஜூ கேள்வி: எக்ஸ் தள பதிவால் அதிமுகவினரிடையே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sellur Raju ,Modi ,Tamil Nadu ,DMK ,AIADMK ,Madurai ,minister ,Modiji ,Erode ,Selur Raju ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி தலைமையிலான அரசு...