சென்னை: தமிழகத்தில் பி.எட்., படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியதுஎன உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்புகளுக்கான கலந்தாய்வை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளில், 14 அரசு உதவி பெரும் கல்லூரிகள் என மொத்தம் 21 கல்லூரிகளில் 2,040 இடங்கள் உள்ளன. இப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலம் செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெற்றது. பிஎட் படிக்க 5,138 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 6ம் தேதி வெளியானது. முதல் நாளான நேற்று சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இக்கலந்தாய்வு வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிஎட் கலந்தாய்வை 2023ம் ஆண்டு ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக 4 ஆயிரம் விரிவுரையாளர்களை நியமிக்க டிஆர்பி தேர்வு நடத்தப்படும். தற்போது பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் வரை நீக்கப்படமாட்டார்கள்.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் விரிவுரையாளர் தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் நேர்முகத்தேர்வில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். கவுரவ விரிவுரையாளராக பணியில் உள்ள 5,600 நபர்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விரிவுரையாளர்களுக்கான தகுதி இல்லாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களை தகுதிப்படுத்தினால் பணியில் தொடர முடியும்.