சென்னை: கட்டிட அனுமதி மற்றும் நில உபயோக மாற்றத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிக்கும் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படும் என டிடிசிபி இயக்குனர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாநிலம் முழுவதும் உள்ள நகர் ஊரமைப்பு (டிடிசிபி) அதிகாரிகளுக்கு, அதன் இயக்குனர் சரவணவேல்ராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நிதித்துறை அமைச்சர் 2022-23ம் நிதிநிலை அறிக்கையில் திட்ட அனுமதி, கட்டிடம் கட்டுதல் மற்றும் மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக மாநிலம் முழுமைக்கும் ஒற்றைச் சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதற்கிணங்க, மனைப்பிரிவு உத்தேசங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து தற்போது நாளை (15ம் தேதி) முதல் அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் கட்டிட உத்தேச அனுமதி மற்றும் நில உபயோக மாற்றம் குறித்த உத்தேச விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.