ஆவடி: ஆவடி அருகே அண்ணனூர், சிவசக்தி நகர் பிரதான சாலையில் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் இம்மையத்தின் மின்கருவிகள் தீப்பிடித்து அதிகளவு கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கும் தீயணைப்பு படையினருக்கும் கட்டிட உரிமையாளர் தாமோதரன் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து, ஏடிஎம் மையம் அமைந்துள்ள பகுதியின் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் வந்து, ஏடிஎம் மையத்தில் பரவிய தீயை அணைத்தனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு வங்கி மேலாளரின் அறையில் யுபிஎஸ் கருவியை ஆய்வு செய்தனர். அதில், அக்கருவிக்கு உயர் அழுத்த மின்சாரம் அதிகளவு வந்ததால் வெடித்து சிதறி தீப்பிடித்திருப்பது தெரியவந்தது. தீயணைப்பு படையினரின் துரித நடவடிக்கையால் ஏடிஎம் மெஷினில் இருந்த ரூ.4 லட்சம் தீயில் எரிந்து கருகாமல் தப்பியது.இதுகுறித்து தகவலறிந்ததும் ஏடிஎம் மைய மேலாளர் ரகுபதி மற்றும் வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். இப்புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான பிற காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.