திசையன்விளை : திசையன்விளை அருகே கரைச்சுத்துப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது தெற்கு புலிமான்குளம். இங்கு அரசு ஆதி திராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இப்பள்ளி 70 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது பள்ளியின் மேற்கூரை சிதலமடைந்து ஓடுகள் திடீர் திடீரென கீழே விழுந்து மாணவ மாணவிகளின் உயிருக்கு ஆபத்தை உருவாக்கும் நிலையில் உள்ளது. அத்துடன் ஜன்னல், கதவு அனைத்தும் கரையான் அரித்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
மதியம் மேற்கூரையில் ஓடுகள் இல்லாத இடைவெளி வழியாக சூரிய ஒளி முழுவதும் வகுப்பறையில் பிரகாசிக்கும். பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை மாற்றி புதிய கட்டிடம் கட்டவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த பள்ளியை புதிதாக கட்ட ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த பருவ மழையின் போது பள்ளி வகுப்பறைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்தது. அதனை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். எனினும் இதுவரை புதிய பள்ளி கட்டிடம் கட்டப்படவில்லை. குழந்தைகளின் உயிர் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு மாணவ மாணவிகளை பெற்றோர் அனுப்ப மறுத்து வருகின்றனர். இந்நிலை கடந்த 3 தினங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.