சென்னை: பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக 1825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து வரும் 15ம் தேதி முதல் 15.3.2022 வரை, முதல் 62 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கனஅடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 2865 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும். இதேபோல், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு நீர்த்தேக்கத்திலிருந்து 15.10.2021 முதல் 152 நாட்களுக்கு மொத்தம் 937.41 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.