சென்னை: அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கொரோனா காலத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றி பல உயிர்களை காத்துள்ளனர் என்று இயற்கை, யோகா மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி உள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் இயங்கிவரும் இந்த கல்லூரியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது. விதிகளுக்கு முரணாக பல செயல்பாடுகள் நடந்ததாகவும் கூறப்பட்டது.
இதன் மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. பல மருத்துவர்கள் கொரோனாவை காரணம் காட்டி வெளியூர்களுக்கு சென்றதாகவும் பணி செய்யாமல் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், கொரோனா காலக்கட்டத்தில் இந்த மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அமர்த்தப்பட்டனர் என்றும் இவர்களின் சிறப்பான பணியால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் நடந்தது குறித்த செய்திகள் ஆய்வு செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்திய இயற்கை மற்றும் யோகா மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.