சென்னை: நடிகை மீரா மிதுனை மீண்டும் இரு வழக்குகளில் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பட்டியலின மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீரா மிதுனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் எம்.கே.வி. நகர் காவல் நிலையத்தில் ஜோ மைக்கல் பிரவீன் என்பவரை மிரட்டிய விவகாரத்தில் போலீசார் மீரா மிதுனை 2வது முறையாக கைது செய்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு ஜோ மைக்கல் என்பவரை தாக்க திட்டமிட்ட வழக்கிலும், கடந்த 2019ம் ஆண்டில் நட்சத்திர விடுதியில் மேலாளரை மிரட்டிய விவகாரத்திலும் மீரா மிதுன் மீது 2 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த 2 வழக்குகளிலும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து இன்று சட்டப்படி அவர் கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கின்றனர். அதன் அடிப்படையில் புழல் சிறையில் இருக்கும் நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார். மொத்தமாக இதுவரை நடிகை மீரா மிதுன் 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.