×

உலகத் தென்னை தினம் : தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை விளைபொருட்களை தொடர்ந்து பயன்படுத்த தமிழக அரசு கோரிக்கை!!

சென்னை : செப்டம்பர் 2ம் தேதி அன்று உலகத் தென்னை தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களின் செய்தி வெளியீடு

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று, உலகத் தென்னை தினமாக கொண்டாடப்படுவதை ஒட்டி, மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள், தென்னை மரத்தின் மகத்துவத்தையும், தென்னையிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருட்கள் உடல்நலத்திற்கு மிகவும் பயனுள்ளவை என்பது பற்றியும் விளக்கி, தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுவரும் திட்டங்களை பற்றி எடுத்துரைத்து கீழ்க்காணும் செய்தியினை வெளியிட்டார்கள்.
உடல்நலத்திற்கு தேவைப்படுகின்ற சத்துக்கள் அதிகமுள்ள தேங்காய் நமது உணவில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  

இளநீர் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய, நமது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்ற ஆரோக்கியமான, பானமாக விளங்குகிறது. தேங்காய் எண்ணெயின் தனி சுவையினாலும், தனி நறுமணத்தினாலும், நமது உணவிலும், அனைத்து அழகுப்பொருட்கள் தயாரிப்பிலும் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கொலஸ்டிரால் இல்லாத காரணத்தினால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெர்ஜின் தேங்காய் எண்ணெயில், தாய்ப் பாலுக்கு இணையான ஊட்டச்சத்துக்களும் உடல் எதிர்ப்பு சக்தியும் உள்ளது என்பதால் அனைத்து எண்ணெய் வகைகளுக்கும் அன்னையாக கருதப்படுகிறது. தென்னம்பாளையிலிருந்து தயாரிக்கப்படும் நீரா எனும் பானம் அமினோ அமிலம், பி வைட்டமின் அதிகமுள்ளது.

கிளைஸிமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், நீரழிவு நோய் உள்ளவர்களும் இந்த நீரா பானத்தினை பருகலாம். தென்னை நார், தென்னை ஓலை, தேங்காய் சிரட்டை என தென்னையின் அனைத்து பாகங்களுமே நமக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகின்றன. தமிழ்நாட்டில் தென்னை அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கருதப்படுகிறது. தென்னை தனி தோப்பாகவோ, வரப்புப் பயிராகவோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ சாகுபடி செய்யப்படுகிறது. நமது மாநிலத்தில் 4.39 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு, 50,663 இலட்சம் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு, தேசிய அளவில் இரண்டாமிடம் வகிக்கிறது.
    
எனவே, தென்னையின் உற்பத்தித்திறனில் தமிழ்நாடு தேசியஅளவில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென்னை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில், வேளாண் நிதிநிலை அறிக்கையில்  “சீர்மிகு தென்னை சாகுபடி” என்ற தலைப்பில், 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென்னையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க ‘ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்புத் தொகுப்புத் திட்டம்’, தென்னை விவசாயிகள் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுவதற்கு தென்னை மரங்களுக்கிடையே உள்ள  இடைவெளியை திறம்பட பயன்படுத்த, பல்லடுக்கு  சாகுபடி விவசாய முறை, நடப்பாண்டில் தென்னை சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்காக 17 இலட்சம் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி, தென்னந்தோப்புகளில் பாசன நீர் பற்றாக்குறையினைப் போக்குவதற்கு 20,000 எக்டரில் சொட்டு நீர்ப் பாசன முறை, தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு நடவடிக்கை, பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் துணை மண்டல மையம் அமைக்க நடவடிக்கை, டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகளின் நலனுக்காகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை மதிப்பு கூட்டும் மையம் என பல்வேறு வகையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் உதவியின் மூலம் ரூ.14.71 கோடிசெலவில் தென்னை விவசாயிகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.    

தென்னை கொப்பரையின் சந்தை விலை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறையும்பட்சத்தில், அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதால், விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் தென்னைக்கென்றே தனியாக 43 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இதுபோன்ற நிறுவனங்களை உருவாக்கி, பயிற்சி அளித்து மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.25 இலட்சம் ரூபாய் அரசு செலவிடுகிறது. தென்னை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் செண்பகராமன் புதூரில் தென்னை மதிப்புக்கூட்டு மையம் ரூ.16 கோடி நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது.

விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினால், திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம் திப்பம்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் ராஜேந்திரபுரம் ஆகிய நான்கு இடங்களில் முதல்நிலை பதப்படுத்தும் நிலையங்கள் ரூ.13.25 கோடி செலவில் அமைக்கப்பட்டு தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    
எனவே, உலகத் தென்னை தினமான இன்று, தென்னை விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அறிவித்து  செயல்படுத்தி வருகின்ற பல்வேறு திட்டங்களை தென்னை விவசாயிகள் அனைவரும் தெரிந்துகொண்டு பயன்பெற வேண்டும். “கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும், அதன்பிறகும், பாதுகாப்பான, ஒன்றிணைந்த, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நிலைத்திருக்கக்கூடிய வகையில் ஒரு தென்னை சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்று நடப்பாண்டின் உலக தென்னை தின முக்கிய நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் பல்வேறு வகையிலான இயற்கை விளைபொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவோம். அதன் மூலம், நமது வாழ்க்கையை ஆரோக்கியமான வாழ்க்கையாக மாற்றுவோம் என்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உறுதி ஏற்குமாறு தமிழ்நாடு அரசு சார்பாக உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags : World Coconut Day ,Tamil Government , தமிழக அரசு
× RELATED லால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதியில் 54...