புடாபெஸ்ட்: உலக டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய இணை சத்யன், மனிகா ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். ஹங்கோரி தலைநகர் புடாபெஸ்டில் உலக டேபிள் டென்னிஸ் நடக்கிறது. அதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய இணை சத்யன் ஞானசேகரன், மனிகா பத்ரா ஆகியோர், பெலாரஸ் இணை கெனின் அலெக்சாண்டர், டாரியா டிரிகோலோஸ் ஆகியோருடன் மோதியது. அதில் இந்திய இணை அதிரடியாக விளையாடி 11-6, 11-5, 11-4 என நேர் செட்களில் பெலாரஸ் இணையை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய இணை இறுதி ஆட்டத்தில் ஹங்கேரி இணை எக்செகி நன்டோர், டோரா மடரசஸ் ஆகியோரை எதிர்கொள்கிறது.
அதேபோல் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றில் மனிகா பத்ரா 3-2 என்ற செட்களில் இத்தாலி வீராங்கனை பிக்கோலின் ஜியார்ஜியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 2வது சுற்றில் 3-0 என்ற நேர் செட்களில் ஸ்லோவாக்கியா குடியரசு வீராங்கனை பார்போரா பலாசோவாவை வென்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் இந்திய வீராங்கனைகள் மனிகா-ஸ்ரீஜா இருவரும் மோதினர். அதில் மனிகா 3-2 என்ற செட்களில் போராடி வென்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார்.
சிம்ரனுக்கு வெண்கலம்
ரஷ்யாவின் உபா நகரில் நடக்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 50கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன் கவுர் வெண்கலம் வெனறார். இந்த போட்டியில் இந்தியா வெல்லும் 7வது பதக்கம் இது.