சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவிற்கு முன்னர் தமிழகத்துக்கு 100 டன் ஆக்சிஜன் தான் தேவைப்பட்டது. ஆனால் தற்பொழுது 500 டன் தேவைப்படுகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு, கிராமங்களில் இருந்தும் சிறு நகரங்களில் இருந்தும், திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், வேலூர், சேலம் போன்ற பெரிய மாவட்ட தலைநகரங்களுக்கும் உடனடி சிகிச்சைக்காக அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.எனவே தமிழக அரசும்,
சுகாதாரத்துறையும் பெரிய மாவட்ட தலைநகரில் உள்ள அனைத்து வசதி உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் கண்காணிக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளும், ஆக்சிஜன், வென்டிலேட்டர், மருந்துகள் போன்றவை பற்றாக்குறை இல்லாமல் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு இவை மிகவும் அவசியமாக இருக்கிறது. எனவே தமிழக அரசு மாவட்டம் வாரியாக கவனம் செலுத்தி கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.