×

கீழ்ப்பாக்கம் அரசு மருந்தகத்தில் 6 நாட்களில் 15 ஆயிரம் குப்பி ரெம்டெசிவிர் ரூ.2.35 கோடிக்கு விற்பனை: மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் தகவல்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு உயிர்காக்கும் மருந்தகத்தில் ஆறு நாட்களில் 15 ஆயிரம் குப்பி ரெம்டெசிவிர் மருந்துகள் ரூ.2.35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத்  கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு ரெம்டெசிவிர், டோசிலிசுமாப், எனாக்சிபிரின் போன்ற மருந்து, மாத்திரைகள் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்புக்கு உள்ளான கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் பயன் உள்ளதாக இருப்பதாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக டாக்டர்கள் பரிந்துரை சீட்டு மட்டுமே வழங்கி வெளி மருந்தகங்களில் வாங்க வரும்படி உறவினர்களிடம் வலியுறுத்துகின்றனர். இதனால் பலர் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க அலைந்தனர். மேலும் கள்ளச்சந்தையில் பல ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரெம்டெசிவிர் குப்பி விற்பனை செய்யப்பட்டது.

இதை தவிர்க்கும் வகையில் தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி உயிர்காக்கும் மருந்தகத்தை துவங்கியது. இங்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து கூட்டம் அலைமோதியது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவதால் இடப்பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி வளாகம் என இரண்டு இடங்களில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. ரெம்டெசிவிர் உயிர்காக்கும் மருந்தில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் மக்கள் வாங்குவதற்காக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர். இதற்கு தீர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத் கூறியதாவது: உரிய ஆவணங்களுடன் வருவோருக்கு ஒரு குப்பி ரூ.1,568 என ஆறு குப்பிகள் வழங்கப்படுகிறது. அதன்படி ஆறு நாட்களில் 15 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் ரூ.2 கோடியே 35 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்பனையை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரெம்டெசிவிர் பிரச்னைக்கும் விரைவில் தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : 15 thousand bottles of Remtacivir sold for Rs. 2.35 crore in 6 days at the Government Pharmacy: Information
× RELATED பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி...