தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டி அதிமுக தேர்தல் அலுவலகத்தில், பாஜ மாவட்ட செயலாளரை அரிவாளால் வெட்ட முயன்ற அதிமுக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி தொகுதி அதிமுக வேட்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அதிமுகவினரும், பாஜவினரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். போடி தொகுதிக்குட்பட்ட தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அதிமுக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, கடந்த 1ம் தேதி இரவு பாஜ மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில், மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்திற்கு ஆட்களை அழைத்துச் செல்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு வந்த பழனிசெட்டிபட்டி அதிமுக முன்னாள் செயலாளர் முருகேசன், பாஜவை சேர்ந்த மனோகரனிடம் தகராறில் ஈடுபட்டார். திடீரென முருகேசனை, மனோகரன் அரிவாளால் வெட்ட முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் தடுத்து இருவரையும் சமாதானப்படுத்தினர். மோடிக்கு ஆட்களை அழைத்துச் செல்ல பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக இருவருக்கும் தகராறு என கூறப்படுகிறது.இது குறித்து பாஜ நிர்வாகி மனோகரன் கூறுகையில், ‘‘எனக்கும், அதிமுக நிர்வாகி முருகேசனுக்கும் வீடு சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக அவர் என்னை வெட்ட வந்தார்’’ என்றார். போடி தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டியில் அதிமுக மற்றும் பாஜ நிர்வாகிகளுக்கிடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வரகிறது.