சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக துணை ராணுவப் படையினர் 30க்கும் மேற்பட்டோர் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது, நான்கு வழிச்சாலையாக உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 6 வழிப்பாதையாக மாற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. இதற்கான கனரக இயந்திரங்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் துணை ராணுவப்படையினர் சென்ற அரசு பஸ், காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சென்றபோது, திடீரென பஸ் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கனரக வாகனத்தின் மீதுமோதியது. இதில் 15க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.