சென்னை: தமிழக மருத்துவ கலந்தாய்விற்கு 27 மதிப்பெண் பெற்ற மாணவி தீக்ஷா 610 மதிப்பெண் பெற்றதாக போலி நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல், போலி தரவரிசை பட்டியல், கலந்தாய்வுக்கான போலி அழைப்பு கடிதம் என மூன்று ஆவணங்களை சமர்ப்பித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை பல் டாக்டர் பாலசந்திரன் ஆகியோர் மீது, மருத்துவ கல்வி இயக்ககம் துணை இயக்குநர் செல்வராஜன் மெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் கடந்த 1ம் தேதி பெங்களூரில் மாணவியின் தந்தை பாலசந்திரனை கைது செய்தனர். மாணவி தீக்ஷா தலைமறைவாக இருந்தது வந்தார்.
கைது செய்யப்பட்ட பல் டாக்டர் பாலசந்திரனை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், அவரது மகள் தீக்ஷா பெங்களூரில் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மாணவி தீக்ஷாவை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வந்தனர். அதில், மாணவி பெங்களூரில் பதுங்கி இருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று தலைமறைவாக இருந்த மாணவி தீக்ஷாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவி தீக்ஷாவை தனிப்படையினர் நேற்று மாலை சென்னைக்கு அழைத்து வந்தனர். பிறகு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சந்தோஷ் உத்தரவுப்படி மாணவி தீக்ஷாவை போலீசார் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த மோசடியின் பின்னணி குறித்து மாணவியிடம் விசாரணை நடத்த பெரியமேடு போலீசார் 5 நாள் போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளும் தற்போது நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.