கோலார்: கோலார் உள்பட வறட்சி பாதித்த மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக அரசு செயல்படுத்தி வரும் எத்தினஹொளே நீர்ப்பாசன திட்டத்தின் முழு விவரத்தை மாநில அரசு பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஜி.வி.ஸ்ரீராமரெட்டி வலியுறுத்தினார். இது குறித்து கோலார் நகரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ``பெங்களூரு ஊரகம், கோலார், துமகூரு, சிக்பள்ளாபுரா, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்கள் கடுமையான வறட்சி பாதித்த மாவட்டங்களாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், ஏரிகள் வறண்டு காணப்படுவதுடன், ஆயிரம் அடி போர்வெல் போட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், புளோரைட் அமிலம் கலந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் வறட்சி பாதித்த மாவட்டங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புராவில் பாய்ந்தோடும் எத்தினஹொளே நதியில் இருந்து கால்வாய் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. நீர்பாசன நிபுணர் பரமசிவய்யா தலைமையில் குழு கொடுத்த அறிக்கையை அடிப்படையாக வைத்து 24 டி.எம்.சி. தண்ணீர் கால்வாய் மூலம் கொண்டுவரும் எத்தினஹொளே திட்டத்திற்கு பாஜ ஆட்சியில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம் தொய்வில்லாமல் செயல்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மெத்தனமாக நடக்கிறது. இது குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.