சென்னை: சென்னை -ரேணிகுண்டா மார்க்கத்தில் இன்று 130 கி.மீ அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், சென்னை-ரேணிகுண்டா மார்க்கத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக சோதனை ஓட்டத்தில் பயணிகள் ரயிலை 130 கி.மீ வேகத்தில் இயக்கும் வகையில் இருப்புப்பாதையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. ஆர்.டி.எஸ்.ஓ மூலம் நடத்தப்படும் இந்த சோதனை ஓட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா இடையே மதியம் 1 முதல் 2.30 மணி வரையிலும், மற்றும் ரேணிகுண்டா- சென்னை சென்ட்ரல் இடையே மாலை 3.30 மணி முதல் 5 மணி வரையிலும் இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. எனவே சென்னை - ரேணிகுண்டா மார்க்கத்தில் உள்ள ரயில்பாதை அருகாமையில் வசிக்கும் பொதுமக்கள் தண்டவாளங்களை கடக்கவோ அல்லது அதன் அருகே நடந்து செல்லவோ வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.